Thursday, February 9, 2006

மரணதண்டனை வேண்டுமா?

சென்ற வாரம் உலகையே சர்ச்சைக்குள்ளாக்கிய விஷயம் ஆஸ்திரேலியர் ஒருவர் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நியூயொண்டு வோங் வான், 25 வயதான இளைஞர் போதை பொருளைக் கடத்தினார் என்று சிங்கப்பூர் அரசு செய்தது, சிங்கப்பூரில் தண்டனைகள் மிக கடுமையாக இருக்கும். போதை பொருள் கடத்தி வந்ததற்காக மரண தண்டனை சிங்கப்பூர் அரசு அளித்தது. இத்தீர்ப்பு ஆஸ்திரேலியாவில் பெரும் புயலைக் கிளப்பியது. ஆஸ்திரேலியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசும், மக்களும் இதை எதிர்த்தனர். உலகளாவிய சமுக இயக்கங்களும், மனித உரிமை சங்கத்தினர்களும் தண்டனையை குறைக்கும்படி சிங்கப்பூர் அரசை கேட்டு கொண்டார்கள். சிங்கப்பூர் பிரதமரிடம் கருணை மனுவை வோங் வான் குடும்பத்தினர் அளித்தனர். வோங் வானின் தண்டனையை குறைக்கும்படி அம்மனுவில் கேட்டு கொண்டனர். ஆனால் அந்நாட்டு பிரதமர் கருணை மனுவை நிராகரித்துவிட்டார். இதனால் வோங் வானின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. மரண தண்டனையை எதிர்த்து மனித உரிமை சங்கத்தினரும், எதிர்ப்பாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல முயற்சிகள் மேற்கொண்டும் பயனளிக்கவில்லை. வோங் வான் குறிப்பிட்ட நேரத்தில் தூக்கிலிடப்பட்டார். ஆஸ்திரேலிய அரசு வக்கீல் பிலிப்ருடோக் இந்த மரண தண்டனையை காட்டு மிராண்டி தனம் என்று கண்டித்துள்ளார். சுற்றுலா நாடான சிங்கப்பூர் அரசின் இந்த செயல் வருத்தம் அளிப்பதாக உள்ளது.மரண தண்டனைக்கு எதிராக குரல்கள் இன்றல்ல, சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே ஓங்கி ஒலித்தது. தண்டனை என்பது மனிதனை சீர்திருத்துவதாக இருக்க வேண்டுமே தவிர பழிவாங்கும் நோக்கோடு இருக்க கூடாது. பொதுவாகவே மரணதண்டனை கொலை குற்றம் புரிபவர்களுக்கு அளிக்கப்படும். ஒரு கொலைக்கு மற்றொரு கொலை தீர்வாகுமா? என்பது தான் நம் கேள்வி. மரண தண்டனையால் குற்றவாளிகள் சீர்திருத்துவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது. உலகில் 120 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. 27 நாடுகளில் சட்டப்படி ஒழிக்கப்படாவில்லையென்றாலும் மரண தண்டனை வழங்கப்படுவதில்லை ஐரோப்பா முழுவதும் மரண தண்டனை தரப்படுவது இல்லை. அமெரிக்காவில் பல மாகாணங்களில் மரண தண்டனை கிடையாது. பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யூ மரணதண்டனையை எதிர்த்து எழுதிய ‘தி கில்லடின்’ எனும் சிறுநூல் இன்றளவும் மரண தண்டனைக்கு எதிரான ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.பல நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டாலும் அகிம்சையைக் கொள்கையாகக் கொண்டு விடுதலை பெற்று தந்த காந்தியடிகள் பிறந்த நம் நாட்டில் மரண தண்டனை ஒழிக்கபடவில்லை. பிறர் உயிர்களை நேசிக்கும்படி உலகத்துக்கே எடுத்துக் கூறிய புத்தர், மகாவீரர் போன்ற மகான்கள் நம் நாட்டில் தான் பிறந்துள்ளனர் 1980ல் மரண தண்டனைக்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைகோ கொண்டு வந்த தனிநபர் மசோதா மீது நீண்ட விவாதம் நடைபெற்றது. 1998ஆம் ஆண்டுபூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றம் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து நாடு தழுவிய விவாதமும், எதிர்ப்பும் நடைபெற்றது. பின்னர் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லபட்டது. உச்ச நீதிமன்றம் இந்த 26 பேருக்கும் மரண தண்டனையை ரத்து செய்தது நிதிமன்றமே மரண தண்டனை வித்தாலும், அதை ரத்து செய்யும் அதிகாரம் நம் நாட்டில் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது.இந்தாண்டு அக்டோபர் 17ஆம் நாள் மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை நிராகரிக்கப் பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கோப்பு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் இக்கோப்பு ஜனாதிபதி அப்துல்கலாம் அதை மீண்டும் நிராகரித்தார். குற்றவாளியின் நடத்தை, குடும்ப பின்னனி அவர்களுடைய வயது உடல்நிலை போன்றவைகளை ஆய்வு செய்துஇந்தஉலகில் வாழும் எஞ்சிய நாட்களை தங்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வாழ வழிவிட வேண்டும் என்று நம் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ளார்.மரணதண்டனைக்கு எதிராக உலகளவில் விவாதம் நடைபெற வேண்டும். மரண தண்டனைக்கு பதிலாக வாழ்நாள் முழுவதும் சிறைதண்டனை இதற்கு நல்ல தீர்வாக இருக்கும்.

No comments:

Post a Comment